இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக உள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக உருவாகக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin தெரிவித்துள்ளார்.
இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது அவர் இதனை வலியுறுத்தினார். உலகளாவிய நெருக்கடிகள் நிலவுகின்ற இக்காலகட்டத்தில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ரஷ்யாவிற்கு தெளிவான புரிதல் உள்ளதாக குறிப்பிட்ட அவர் வலுசக்தி துறையைத் தாண்டி தொழில்நுட்பம் இயந்திர உபகரணங்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இலங்கையில் வழங்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கு நன்றி தெரிவித்த Roman Marshavin இவ்விஜயம் இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கிடையேயான பழமையான நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த காலங்களில் சோவியத் ரஷ்யா வழங்கிய தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் உதவிகள் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டார்.
அண்மைக்காலங்களில் ரஷ்யா இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடுகளில் ஒன்றாக உள்ளதையும் இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதிலும் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஆதரவு அளிப்பதிலும் ரஷ்யா வழங்கும் ஒத்துழைப்பையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
மேலும், இவ்விஜயம் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் தொழில் அமைச்சர் மற்றும் நிதி# திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan, Vladimir Khazov, Sergey Rodin ஆகியோரும் ரஷ்ய தூதுக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டனர்.





Leave a Reply