பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் நாட்டின் பொது வாழ்க்கையை மீட்டெடுக்கும் திட்டத்திலும் உள்ளூர் வணிக சமூகத்தின் வலுவான ஆதரவை அரசு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நேற்று (29) இரவு முப்படை தலைமையகத்தில் நடைபெற்ற இலங்கை வர்த்தக சபையுடனான சிறப்பு கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையை சமாளிக்க அரசு முன்னெடுத்து வரும் நிவாரணத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வணிக தலைவர்களுக்கு விரிவாக விளக்கினார். அதேசமயம் இந்த முயற்சிகளுக்கு வணிக சமூகத்திடமிருந்து கிடைக்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக தொழில்துறை துறையில் உருவாகியுள்ள சவால்கள் அவற்றை சமாளிக்க தேவையான அவசர நடவடிக்கைகள் தொழில்துறையை நிலைநாட்டி நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தவிர்க்க வேண்டிய தீர்வுகள் என பல்வேறு அம்சங்கள் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டன.
மேலும் சுற்றுலா, விமான நிலையம், போக்குவரத்து துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் வணிக தலைவர்கள் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்தனர். பேரிடர் நிலைமை தணிந்த பின் நெடுஞ்சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலில் வெளிநாட்டு விவகாரங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க, நிதி செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்ட, முப்படைகளின் தளபதிகள், காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், இலங்கை வர்த்தக சபையின் தலைவர் கிரிஷான் பாலேந்திரன் மற்றும் அதன் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





Leave a Reply