விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எளிமையாக இருந்தபோதிலும், அவற்றை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கம் அடக்குமுறை போக்குடன் விவசாயிகளை நசுக்கி வருவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முதன்மை சக்தியாக விவசாயிகள் விளங்கினாலும் இன்று அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
விவசாய உற்பத்திக்குத் தேவையான உரம், விதைகள் மற்றும் ஏனைய உள்ளீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு நியாயமான விலையும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை அரசாங்கம் புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர் இறக்குமதியை மையப்படுத்திய தவறான கொள்கைகள் காரணமாக உள்நாட்டு விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகும் என்பதால் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.





Leave a Reply