யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் காவலில் வைத்து விசாரணை செய்ய மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணிக்கவிருந்த பயணிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது இந்தியப் பிரஜைகளான இருவரிடமிருந்து தலா 100 கிராம் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 26 பேர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்போது மேலும் 6 பேரின் உடலுக்குள் தங்கக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 20 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் தங்கக் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 8 பேரை சுங்க அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 இலங்கைப் பெண்களும் 6 இந்திய ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.





Leave a Reply