இந்தியாவில் கட்டாயமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள E20 பெட்ரோல் (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எரிபொருள் செயல்திறன் குறைவு, வாகனங்களின் மைலேஜ் பாதிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்திய அரசு கடந்த ஆண்டு முதல் E20 எரிபொருள் பயன்பாட்டை கட்டாயமாக்கியது. ஆனால் இதனால் வாகனங்களின் செயல்திறன் குறைந்துள்ளதாகவும் எரிபொருள் விரைவாக செலவாகிறது என்றும் பல வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு முக்கிய அரசியல் சவாலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது இந்திய சட்டத்துறை தலைமை அதிகாரி ஆர். வெங்கடரமணி நீதிமன்ற விசாரணையின்போது E20 திட்டத்தை ஒரு பரிசோதனை (Experiment) என்று குறிப்பிட்டதாக வெளியான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து. பின்னர் அவர் பரிசோதனை என்ற வார்த்தை எத்தனால் விநியோக அளவைப் பற்றியே கூறப்பட்டதாகவும் அரசின் கொள்கையை குறிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.எனினும் இந்த விளக்கம் பொதுமக்களின் எதிர்ப்பை குறைக்கவில்லை. அரசாங்கம் போதுமான ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகள் இன்றி இந்தத் திட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதற்கிடையில் இந்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எத்தனால் கலந்த எரிபொருள் பந்தயக் கார்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாகனத்தின் வேக உயர்வு மேம்படும். மைலேஜ் மட்டும் சற்று குறையலாம் என்று தெரிவித்தார்.இந்நிலையில் டெல்லியில் E20 கொள்கைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் அதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.E20 எரிபொருள் தொடர்பான இந்த விவகாரம் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் செலவு மற்றும் நுகர்வோர் உரிமைகள் குறித்த புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இந்த சர்ச்சையின் போக்கை தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.









Leave a Reply