மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறை பிரிவுக்குட்பட்ட திசைவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்குத் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் சடலம் நேற்று (23.12.2025) மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர், வினோதா ஜெகநாதன் (வயது 71) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஓய்வுபெற்ற ஆசிரியை என்பதுடன், குறித்த வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் பணியாற்றும் பணிப்பெண் வெளியே சென்று திரும்பியபோது, வீட்டில் இருந்த வினோதா ஜெகநாதனை காணாததால் அவரைத் தேடியுள்ளார். இதன்போது வீட்டின் கிணற்றில் சடலமாக கிடந்ததை கண்டறிந்து அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் பிரிவு காவல்துறையினரும், தலைமையகப் காவல்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை வழங்கினார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





Leave a Reply