நாட்டில் பரவிவரும் போதைப் பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்கும் தனது பணி தொடர்பில் அரசு எவ்வித எதிர்ப்புகளாலும் அல்லது விமர்சனங்களாலும் திசைதிருப்பப்படமாட்டாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில், தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று குறித்த “A Nation United” தேசிய போதைவிரோத நடவடிக்கைத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மிகவும் சவாலான இப்பணியை மேற்கொண்டு வரும் பாதுகாப்புப் படையினருக்கு அரசின் முழு ஆதரவும் இருக்குமென ஜனாதிபதி உறுதியளித்தார்.
“பணியைத் தொடங்குங்கள். நாங்கள் உங்களுக்கு முழு ஆதரவு வழங்குவோம்” என்று அவர் பாதுகாப்புப் படையினருக்கு ஊக்கமளித்தார்.
நாடு முழுவதும் பரவிவரும் போதைப் பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள “A Nation United” தேசிய முயற்சி ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கி செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் போதைப் பொருள் பரவல் மற்றும் கடத்தல்களை தடுக்குதல், குறிப்பாக இளைஞர்கள் மீது ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொள்கை ரீதியாக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் இந்தப் திட்டம் முதன்முதலில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி கொழும்பு சுகததாச மைதானத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.





Leave a Reply