சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

கடந்த காலங்களில், செல்வந்தர்களின் உதவியுடன் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை நாம் முன்வைத்தபோது, தேர்தல் காலத்தில் இதனை கேலி செய்த தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், இன்று அதே திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் கூறிய விடயங்களைப் பார்த்து இவர்கள் கேலி செய்தாலும், அன்று எமது கருத்துக்களை விமர்சித்த அரசாங்கம், இன்று எமது எண்ணக்கருக்களையே அரசின் தேசியக் கொள்கையாக பாராளுமன்றத்தில் அறிவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இறுதியில் உண்மை வெல்லும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டம், அரநாயக்க பிரதேச மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ் அரநாயக்க பிரதேச வைத்தியசாலைக்கு 29 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இன்று (20) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது 5 நோயாளி கண்காணிப்பு இயந்திரங்கள், 1 மருந்து செலுத்தும் இயந்திரம் மற்றும் 1 ஊசி செலுத்தும் இயந்திரம் என்பன நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்:

“இடம்பெயர்ந்துள்ள மற்றும் வீடற்றிருக்கும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான காணிகளில் வீடுகளைக் கட்டுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பற்ற இடங்களில் குடியிருந்தவர்களே அனர்த்தம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆகையால், பாதுகாப்பான காணிகளில் தரமான வீடுகளை அமைத்து, அவர்கள் அங்கிருந்தே தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றின் ஊடாக இவை முன்னெடுக்கப்பட வேண்டும்.”

“யாரும் ‘டித்வா’ புயலை ஒரு சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இவ்வாறான அலட்சியமான பார்வையால்தான், சுனாமியிலிருந்து கூட நம்மால் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இன்றும் கூட ‘டாப்ளர்’ ராடார் அமைப்புகளை நிறுவிக் கொள்ள முடியாமல்தானே போயுள்ளது? இயற்கை அனர்த்தங்களை நாம் தொடர்ந்து சந்திக்க இதுவே காரணமாகிறது. இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உயிரிழப்புகள் விடயத்தில் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியடையப்போவதில்லை.”

“நமது நாட்டில் அனர்த்தத்திற்குப் பின்னரான இடர் முகாமைத்துவ செயற்பாட்டில் குழப்பம் நிலவுவது கவலையான விடயமாகும். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஆபத்தானவை என்று அறிவிக்கும்போது, அரசாங்கம் மக்களை இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டு வந்து, பின்னர் மீண்டும் அந்த ஆபத்தான பகுதிகளுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. இவை அபத்தமான செயற்பாடுகளாகும். அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு மக்களை அனுப்புவதன் மூலம் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழப்புகளுக்கு இனியும் இடமளிக்க முடியாது.”

“மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு நாம் ஆதரவு வழங்கினோம். எனவே இந்த நிவாரணங்களை உடனடியாக மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் முறையானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். தயவுசெய்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்து, அரச அதிகாரிகளை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்காமல் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுங்கள். மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டிவிடும் கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.”

“நிவாரணத் திட்டமாக ஐக்கிய மக்கள் சக்தி வைத்தியசாலைகளுக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறது. இந்தப் பேரழிவை நாட்டிற்கு சௌபாக்கியத்தைக் கொண்டுவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே நான் தொடர்ச்சியாகக் கூறி வருகிறேன். சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டி, உலகின் அனுதாபங்களையும் உதவிகளையும் பெறுவதன் மூலம், நாடு முன்பு இருந்ததை விட குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை எட்ட முடியும். அரசாங்கம் இதனை நடத்தாமல் இருக்க முயற்சிக்கிறதா என்று தெரியவில்லை. நாட்டுக்காக நாம் சரியானதை சரியான நேரத்தில் செய்ய வேண்டும். இந்த நன்கொடையாளர் மாநாட்டை நடத்தும் பட்சத்தில், கட்சி வேறுபாடுகள் இன்றி எமது முழுமையான ஆதரவைத் தருவோம்,” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்