பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்குத் தடங்கல் ஏற்படும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தை, திருத்தங்களுடன் 2025/26 ஆம் ஆண்டில் தொடர்ந்து முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட உதவிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 40 இலட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் நன்மையடைவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குச் சுகாதாரக் காப்புறுதி, விபத்துக் காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகக் கல்வி அமைச்சு, ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தை முன்னர் அமுல்படுத்தும் போது அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு, 2025/26 ஆம் ஆண்டில் சில திருத்தங்களை உள்ளடக்கி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அது தொடர்பான ஏற்புடைய சுற்றுநிருபங்கள் மற்றும் ஆலோசனைகளை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading