இலங்கை அரசியலில் நீண்டகாலம் அமைச்சராகவும், ஈ.பி.டி.பி (EPDP) கட்சியின் தலைவராகவும் விளங்கிய டக்ளஸ் தேவானந்தாவை, கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்தமை, உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2001 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட அரச ஆயுதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, அவை பாதாள உலகக் கும்பல் தலைவரான மாகந்துரே மதூஷின் வசம் இருந்தமை கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், அவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 20 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் காணாமல் போனமை தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கை தற்போதைய அரசியல் களத்தில், குறிப்பாக தமிழ் அரசியல் தரப்பில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இதனை நீதிக்கான ஒரு ஆரம்ப கட்டமாகப் பார்க்கின்றனர்.
அதேவேளை, ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள், இந்த கைது நடவடிக்கை அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் எனக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா தொடர்பான விவகாரத்தில், ஏனைய அரசியல் தலைமைகள் பெரும்பாலும் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கூடப் பெற முடியாமல் போனமை, டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளதை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், தற்போது அவர் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், அவருக்காக வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதில் ஏனைய அரசியல்வாதிகளுக்கு அரசியல் ஆதாயம் இல்லை என்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
இதனுடன், புதிய அரசியல் சூழலில் துணை இராணுவ பின்னணி கொண்ட ஒருவருடன் தங்களை இணைத்துக் கொள்வதில் அரசியல் தலைமைகள் தயக்கம் காட்டுவதுடன், இளைஞர்கள் மத்தியில் நிலவும் அரசியல் எதிர்ப்பும் அவர்களுக்கு ஆதரவளிப்பதைத் தடுக்கும் காரணியாக அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.





Leave a Reply