அண்மைக்காலமாக நடைபெறும் ஆலயத் திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தாயக எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்படுவது தொடர்பாக போலீஸார் தங்களது தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட ஒரு காணொளி (Video) தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்பு போலீஸ் பிரிவினர் அந்தப் பாடலைப் பாடிய கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் சாவகச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து விசாரணை வரும் பாடகர்கள் தற்போது யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் ஆலயத் திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு நடைபெறும் மேளக் கச்சேரிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தாயக எழுச்சிப் பாடல்கள் பாடப்படும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து போலீஸார் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் தாயகப் பாடல்களைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் மகனான கோகுலன் உள்ளிட்ட இருவர் கோப்பாய் போலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“பிரிவினைவாதப் பாடல்களை நாங்கள் பாடவில்லை” பாடகர்கள் விளக்கம்
இந்த விவகாரம் குறித்துப் பாடகர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. போர் நடைபெற்ற காலப்பகுதியில் தாயகத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் பாடல்கள் அல்ல என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அக்காலப்பகுதியிலும் காதல் பாடல்கள், பக்திப் பாடல்கள் மற்றும் யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளையும் வலிகளையும் கூறும் பல பாடல்களே வெளிவந்தன. தாங்கள் அத்தகைய (வலி சுமந்த) பாடல்களையே பாடுவதாகவும் சமூகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் எந்தவொரு பாடலையும் தங்களது நிகழ்ச்சிகளில் பாடுவதில்லை என்றும் பாடகர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.





Leave a Reply