நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (05) மதிய வேளையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் ஆண் கைதிகள் குழுவும் கூரையில் ஏறி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மேலும் 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய காயமடைந்த கைதிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவலை ஒருவர் வெளிப்படுத்திய சம்பவமே இந்த மோதலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) அங்கு குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.









Leave a Reply