சர்வதேச அளவில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளின் கூட்டமைப்பான OPEC+ வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நாளாந்த எண்ணெய் உற்பத்தியை மேலும் 188,000 பீப்பாய்களால் அதிகரிக்க கொள்கை ரீதியாக உடன்பாடு கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் நிலவிய பதற்ற நிலைமை தணிந்து உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி கடல்வழியான ஹோர்முஸ் நீரிணை படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டு வருவதும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்து வருவதும் இந்தத் தீர்மானத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
OPEC+ அமைப்பின் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை (05) நடத்திய இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி அதிகரிப்பின் தொடர்ச்சியாகவே ஆகஸ்ட் மாதத்திலும் இந்த கூடுதல் உற்பத்தி அமுல்படுத்தப்பட உள்ளது.
சவூதி அரேபியா ரஷ்யா உள்ளிட்ட முக்கிய உறுப்பு நாடுகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் தங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி ஒதுக்கீட்டை சுமார் 800,000 பீப்பாய்களால் ஏற்கனவே அதிகரித்திருந்தன. அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு OPEC+ நாடுகளின் மொத்த உற்பத்தி கடந்த மே மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.
இருப்பினும் போர் நிறுத்தம் தொடர்பான முன்னேற்றங்கள் மாற்று ஏற்றுமதி வழிகள் மற்றும் சர்வதேச சந்தையில் தேவை–விநியோக சமநிலை மேம்பட்டதன் விளைவாக உற்பத்தி மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதேவேளை போர்காலத்தில் 120 அமெரிக்க டொலர்களைத் தாண்டியிருந்த பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை தற்போது சுமார் 72 அமெரிக்க டொலர்களாகக் குறைந்து, போருக்கு முந்தைய நிலையை மீண்டும் எட்டியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.









Leave a Reply