எல் நினோ மற்றும் லா நினா காலநிலை மாற்றங்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு அறிவியல் தரவுகள் ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய கொள்கைகள் உருவாக்கப்படுவது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எல் நினோ மற்றும் லா நினா தொடர்பான நிபுணர்களுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த காலநிலை மாற்றங்கள் விவசாயம் உணவுப் பாதுகாப்பு நீர்வளங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் தீவிர தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் நிபுணர்களின் பரிந்துரைகள் அரசின் கொள்கைத் திட்டங்களில் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவை பாராளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் மெட்ரோபொலிட்டன் விரிவுரையாளர் ஸ்ரீநாத் பெர்னாண்டோ சுற்றுச்சூழல் நிபுணர் கலாநிதி ஸ்பென்சர் விதாரண ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதான பொருளாதார அதிகாரி ஹசிதா விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் மூத்த சுற்றுச்சூழல் நிபுணர் நதீர ராஜபக்ஷ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் எல் நினோ மற்றும் லா நினா காரணமாக வறட்சி வெள்ளப்பெருக்கு அதிக வெப்ப அலைகள் நீர்ப்பற்றாக்குறை மற்றும் உணவு உற்பத்தி வீழ்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, அதன் விளைவாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
1982, 1997–1998 மற்றும் 2015–2016 காலகட்டங்களில் ஏற்பட்ட வலுவான எல் நினோ உலகளாவிய காலநிலை நெருக்கடிகளை தீவிரப்படுத்தியதை நினைவூட்டிய அவர் தற்போது மீண்டும் வலுவான எல் நினோ உருவாகும் சாத்தியம் இருப்பதாக சர்வதேச காலநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில் காலநிலைத் தாங்குதிறனை மேம்படுத்தும் தேசியத் திட்டங்கள், போதுமான நிதி, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.









Leave a Reply