மக்களின் உயிரும் வாழ்வாதாரங்களும் ஆபத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், ஆளுங்கட்சி–எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடுகளை மறந்து “இலங்கை” என்ற ஒரே தரப்பாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரிவான மூலோபாய கொள்கை முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தார்.
2026–2027 எல் நினோ சுழற்சி கடுமையான வறட்சி மற்றும் அதனைத் தொடர்ந்து பாரிய வெள்ள அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நாட்டின் தயார்நிலையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அனர்த்தம் ஏற்பட்ட பின் நடவடிக்கை எடுக்கும் பழைய நடைமுறையை விட விஞ்ஞான அடிப்படையிலான முன்கணிப்பு,முன்ஆயத்தம் மற்றும் அபாய மேலாண்மை முறைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், உணவு, நீர், வலுசக்தி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்த தேசிய அணுகுமுறையுடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்திய அவர் தேசிய காலநிலை இடர் மற்றும் அனர்த்த உளவு தகவல் மையம் ஒன்றை நிறுவுதல் தாக்க அடிப்படையிலான முன்கணிப்பு முறைகளை நவீனப்படுத்துதல் மற்றும் “தேசிய காலநிலை பின்னடைவு மற்றும் அனர்த்த தயார்நிலை” தொடர்பான ஜனாதிபதி வெள்ளை அறிக்கையை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளையும் முன்வைத்தார்.
வெள்ளம், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் அரசியல் சார்புகளைப் பார்க்காது அனைவரையும் பாதிப்பதால் நாட்டின் எதிர்கால பாதுகாப்பிற்காக பாராளுமன்றம், அரச நிறுவனங்கள் தனியார் துறை மற்றும் சிவில் சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்










Leave a Reply