நாட்டில் நிலவும் கடுமையான தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர் கல்வித்துறையின் வீழ்ச்சி காரணமாக எதிர்காலத்தில் தரமற்ற தாதியர்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக இன்று (01) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய நாட்டில் தேவையான 65,000 தாதியர்களுக்கு பதிலாக தற்போது வெறும் 37,000 தாதியர்களே சேவையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தாதியர் கல்லூரிகளில் சுமார் 150 விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை நீடித்து வருவதுடன் விரிவுரையாளர்களை நியமிக்க மூன்று ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதிலும் இதுவரை தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டினார். தகுதியான விரிவுரையாளர்கள் இல்லாத நிலையில் போதிய பயிற்சியற்ற மற்றும் தரமற்ற தாதியர்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் இது பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையின் தரத்தையே பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
அதேவேளை கடுமையான தாதியர் பற்றாக்குறை காரணமாக 6 மணித்தியாலங்கள் மட்டுமே பணியாற்ற வேண்டிய தாதியர்கள் தற்போது 12 18 மற்றும் 24 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கும் உடல் சோர்விற்கும் உள்ளாகி வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த அதிகப்படியான பணிச்சுமையே அண்மையில் கிண்ணியா வைத்தியசாலையில் தாதியர் ஒருவர் தவறான முடிவெடுக்க காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்த அவர் தாதியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து விரிவுரையாளர்களை நியமிப்பதன் மூலம் தாதியர் கல்வித்துறையை சீரமைக்க அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.









Leave a Reply