நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வேக வரம்பை மீறும் வாகனங்கள் மற்றும் சட்டவிரோத அலங்காரங்களுடன் இயங்கும் பேருந்துகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் ரவீன் சுமனரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பேசிய அவர் நகரப் பகுதிகளிலும் நகரத்திற்கு வெளியேயும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வேக வரம்புகள் தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பாடசாலை வலயங்களில் வேக வரம்பை மேலும் குறைக்கும் புதிய வர்த்தமானி தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
புதிய சட்டத்திருத்தங்களின் கீழ் வேக வரம்பை கடுமையாக மீறுவோருக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளதுடன் அதிநவீன வேகக் கண்காணிப்பு கருவிகள் மற்றும் உடற்கேமராக்கள் மூலம் விதிமீறல்கள் பதிவு செய்யப்படும் என்றார்.
மேலும் போக்குவரத்து பொது ஆணையாளரின் அனுமதியின்றி பேருந்துகளில் மின்விளக்கு அலங்காரம் அதிக சத்தமுடைய ஒலி அமைப்புகள் மற்றும் ஆபத்தான சக்கர மாற்றங்கள் மேற்கொள்வோருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் இவ்வாறான 13 பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கவனச்சிதறலால் இந்த ஆண்டில் மட்டும் 470 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து விதிகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.










Leave a Reply