சிறுவர்களைத் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டங்களை உருவாக்கி மேலும் வலுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் மத அடிப்படையிலான தவறான புரிதல்கள் அல்லது அரசியல் நோக்கங்களால் திசைதிருப்பப்படாமல் கையாளப்பட வேண்டிய தேசிய பிரச்சினை எனவும் கட்சி தெரிவித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மத நிறுவனங்களுக்குள் மட்டும் நிகழும் தனிப்பட்ட பிரச்சினை அல்லாது நாடு முழுவதும் சமூகத்தில் வேரூன்றியுள்ள ஒரு பரந்த சமூகப் பிரச்சினை எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அண்மையில் எழுந்துள்ள சிறுவர் துறவறம் தொடர்பான விவாதங்களும் குடும்பங்களின் பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்புடையவை என சுட்டிக்காட்டியுள்ளது. வறுமை காரணமாக குடும்பங்கள் இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகாமல் இருக்க வலுவான சமூக சேவை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் மத அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் அனைத்து மதப் பிரிவுகளும் குறிப்பாக பௌத்த பங்குதாரர்களும் ஆலோசனை செயல்முறையில் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் உள்ளிட்ட சமூகங்களுக்குள் நீண்டகாலமாக கோரப்பட்டு வரும் சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி இந்த விடயங்களை அரசியல்மயமாக்கும் முயற்சிகள் பிரச்சினையின் அடிப்படை காரணங்களை மறைக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.





Leave a Reply