இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் அனைத்து முதியோர் இல்லங்களும் எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என அதன் பணிப்பாளர் கே. சதுர மிகிதும்ப எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்ததாவது நாடு முழுவதும் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பாக அண்மையில் விசேட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் நிலையங்களை அடையாளம் கண்டு அவற்றின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை தகவல்களை வழங்காத முதியோர் இல்ல நிர்வாகிகள் தேசிய முதியோர் செயலகம் வழங்கியுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து தங்களது விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள நலத்திட்டங்களில் இணைவதற்கு இந்தப் பதிவு அவசியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்களை தங்க வைத்து பராமரிப்பு சேவைகளை வழங்கும் எந்தவொரு நிலையமும் பதிவு செய்யப்படாமல் இயங்கினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இதுவரை பதிவு செய்யப்படாமல் செயல்பட்டு வந்த 311 முதியோர் இல்லங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு தனித்தனியாக எழுத்து மூலம் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் பதிவு செய்யத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேசிய முதியோர் செயலகம் எச்சரித்துள்ளது.








Leave a Reply