இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை மையமாகக் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (03) சென்னை நகரில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்து ஈழத்தமிழர் மக்களின் அரசியல் மனித உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது. தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது ஈழத்தமிழர் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல மனுவொன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழு இதில் பங்கேற்றதுடன் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு மாற்றாக தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு அவசியம் என்பதையும் வலியுறுத்தினர்.
மேலும் ஈழத்தமிழர் இனவழிப்பு தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் இந்திய மற்றும் ஈழத் தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுதல் இந்தியாவில் நீண்டகாலமாக வசித்து வரும் ஈழத் தமிழ் அகதிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்களும் விவாதிக்கப்பட்டன. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றதுடன் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசும் கலந்துகொண்டிருந்தார்.









Leave a Reply