இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மையப்படுத்தி 1976ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் புதிய சர்வதேச அரசியல் செயல்முறை ஒன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சி” (Tamil Political Framework Initiative) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அரசியல் வரைவு ஆவணத்தை உருவாக்கி அதை சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் சமர்ப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
லண்டனில் அறிவிக்கப்பட்ட இந்த முன்முயற்சி தமிழர்கள் தனித்துவமான தேசிய அடையாளம் கொண்ட மக்கள் என்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் வரலாற்று பூர்வீக வாழ்விடங்கள் என்றும் வலியுறுத்துகிறது. மேலும் சர்வதேச சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தங்களது அரசியல் எதிர்காலத்தை ஜனநாயக ரீதியில் தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்ற கொள்கையும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்தகால போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் மாநாடு ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய மிச்சம் மற்றும் மோர்டன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான சியோபான் மெக்டொனாக் பல தசாப்தங்களுக்குப் பிறகு உண்மையான அரசியலமைப்பு மாற்றத்திற்கான சர்வதேச சூழல் தற்போது உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். அதேவேளை அந்த மாற்றங்களை வடிவமைக்கும் செயல்முறைகளில் தமிழ் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வடக்கு–கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உலகத் தமிழ் புலம்பெயர் சமூகங்களை ஒரே ஜனநாயகக் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்த திட்டம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Leave a Reply