வவுனியா ஓமந்தை பகுதியில் உள்ள ஆலயமொன்றில் வழக்கமாக பூஜை செய்யும் குடும்பத்தினருக்கும் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு வன்முறையாக மாறியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது தாயார் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் நேற்று (28) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ஆலயத்தில் நீண்டகாலமாக வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த ஆலயத்தில் பூஜை செய்யும் முறைகள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு தகராறாக மாறிய நிலையில் இளைஞரின் தாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தாயாரை காப்பாற்ற முயன்ற மகனும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். கடுமையாக காயமடைந்த இருவரும் ஓமந்தை பொலிஸாரால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாயார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





Leave a Reply