யாழ்ப்பாணத்தில் காவல்துறையினர் துரத்தி வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து நேற்று (24) இரவு சுமார் 8.15 மணியளவில் நவாலி மூத்தநயினார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம்
மானிப்பாய் காவல்துறையினர் ஒரு காரை துரத்தி வந்த நிலையில், அந்த கார் மூத்தநயினார் ஆலயத்திற்கு அருகிலுள்ள தையல் கடை மற்றும் அதனை அடுத்துள்ள மற்றொரு கடை மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் தையல் கடைக்குள் இருந்தும் வெளியிலும் பேசிக்கொண்டிருந்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலை அனுமதி
படுகாயமடைந்த மூவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை நடவடிக்கை
காரை செலுத்தி வந்த சாரதி மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விபத்தில் இரண்டு கடைகளும் மூன்று தையல் இயந்திரங்களும் பெரிதும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள், காவல்துறையினர் துரத்தியதன் காரணமாகவே கார் சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
விபத்து இடம்பெற்ற இடத்தில் காவல்துறை விசேட அதிரடிப் படையினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





Leave a Reply