இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) சமூக ஊடகங்கள் குறிப்பாக YouTube மற்றும் Facebook வழியாக நடைபெற்று வரும் போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரபூர்வமான தகவல்களை பெற்றுள்ளது.
துபாயில் முன்னர் பணியாற்றிய ஒரு நபர் துபாயில் வேலை பெற்று தருவதாக பொய் கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறார். துபாயில் சட்டப்படி வேலைக்குச் சென்ற இலங்கை வேலைக்காரர்களிடமிருந்து வீடியோக் கருத்துக்களைப் பெற்றுகொண்டு அவற்றை பயன்படுத்தி வேலைவாய்ப்புகள் இருப்பது போல பொய்யான தகவல்களுடன் இணையத்தில் பகிர்ந்துவருகின்றார்.
இதன்மூலம் பலருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி ஏமாற்றிவருகிறார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணை பிரிவு இந்த மோசடி தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே பலர் பணத்தை இழந்ததாக முறைப்பாடுகள் கொடுத்துள்ளனர். இக்குற்றம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக கட்டணம் வசூலிக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட உரிமம் பெற்ற முகவர்களே அதிகாரம் பெற்றவர்கள். மேலும், வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்கள் அனைத்தும் SLBFE மூலம் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி பணம் வசூலிப்பதும், அனுமதியின்றி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இடுவதும் குற்றமாகும்.
எனவே, சமூக ஊடகங்களில் அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறும் நபர்கள் அல்லது விளம்பரங்களை நம்ப வேண்டாம் என SLBFE பொதுமக்களுக்கு வலியுறுத்துகிறது. இத்தகைய சந்தேகமான நிகழ்வுகள் அல்லது நபர்களை பணியகத்திடம் உடனடியாக புகாரளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இவ்வாறான மோசடிகள் தொடர்பாக புகார் செய்ய தொடர்புகொள்ளவும்:
தொலைபேசி இலக்கம் (இலவச ஹாட்லைன்): 1989
சிறப்பு விசாரணை பிரிவு: 011-2864123





Leave a Reply