உலக பொருளாதார மந்தநிலை அபாயம் அதிகரித்து வருவதாக உலக வங்கி (World Bank) எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் எரிசக்தி விலை உயர்வு மற்றும் பணவீக்க அழுத்தங்கள் காரணமாக 2026 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி COVID-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய மிகக் குறைந்த நிலையை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டில் 2.9 சதவீதமாக இருந்த உலக பொருளாதார வளர்ச்சி 2026 ஆம் ஆண்டில் 2.5 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதார முன்னறிவிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் உலக எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude Oil) விலை 2026 ஆம் ஆண்டில் ஒரு பீப்பாய்க்கு 94 அமெரிக்க டொலர் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உர விலைகளும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் உலகளவில் உணவுப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனால் 2026 ஆம் ஆண்டில் உலக பணவீக்கம் 4 சதவீதமாக உயரும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலக பொருளாதார மந்தநிலை அபாயம் மேலும் தீவிரமடைந்தால் 2026 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.3 சதவீதம் வரை சரியக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. அதேவேளை வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெருக்கடியை எதிர்கொள்ள 50 முதல் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அவசர நிதி உதவிகளை வழங்க உலக வங்கி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் இந்த உதவித் தொகை 100 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Leave a Reply