டிட்வா நிவாரணத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்துள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் (Humanitarian Priorities Plan) நிறைவு நிகழ்வு இன்று (11) கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட நிவாரணத் திட்டம் அரசாங்கத்தின் துரித நடவடிக்கைகள் மற்றும் வலுவான தலைமைத்துவத்தால் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி நெருக்கடியான சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான மற்றும் திறமையான முறையில் நிவாரணம் வழங்குவதில் இலங்கை சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
டிட்வா நிவாரணத் திட்டம் மூலம் 35.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 75 சதவீத நிதி ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரதேச செயலாளர் பிரிவுகள் ஊடாக ரூ.27,000 கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் தற்காலிக வீடுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042
25 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டம் ஒன்பது முக்கிய துறைகள் வழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 6.5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களில் சுமார் 5.75 இலட்சம் பேர் நேரடியாக பயனடைந்துள்ளனர். இது மொத்த இலக்கு மக்களில் 87 சதவீதமாகும்.
மேலும் எதிர்கால இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அபாயங்களை முன்கூட்டியே கண்டறியும் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தும் பணிகளும் தொடரப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.













Leave a Reply