ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக இந்திய இராணுவத்தால் வழங்கப்பட்ட விசேட இராணுவத் தளவாடப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சார்தா போர்க்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள இந்த உபகரணங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ நிகழ்வின் போது இலங்கை இராணுவத்திடம் முறைப்படி கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் சுகன்யா ரகத்தைச் சேர்ந்த கரையோர ரோந்துப் பணிகளுக்கான சார்தா கப்பல் தளவாட இடமாற்றப் பணிகள் மற்றும் வழமையான பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த 10 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததுடன் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அங்கு தரித்திருக்கவுள்ளது. இந்த விஜயத்தின் போது கப்பலின் கட்டளைத் தளபதி கார்த்திக் சச்தேவா இலங்கை கடற்படையின் மேற்கு கடற்பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஜே. குமாரவை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் இந்திய மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு யோகா அமர்வுகளிலும் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியக் கடற்படைக் கப்பல்களின் தொடர்ச்சியான இலங்கை விஜயங்கள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான பல தசாப்த கால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் “அயலுறவுக்கு முதலிடம்” என்ற வெளியுறவுக் கொள்கைக்கும் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ள “பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும்” என்ற மகாசாகர் தொலைநோக்குப் பார்வைக்கும் அமைவாக இந்த உறவு மேலும் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Leave a Reply