சீனாவின் வடமேற்கு பகுதியான சின்ஜியாங் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இந்த கோடைக்காலத்தில் தீவிர வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அசாதாரணமாக அதிகரித்த வெப்பநிலை, கனமழை மற்றும் பனிப்பாறைகள் வேகமாக உருகுவது ஆகிய காரணங்களால் இந்த நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் மிகப்பெரிய பாலைவனமான டக்லமகான் பாலைவனத்தில் இந்த ஆண்டின் முதல் வெள்ளம் ஜூன் மாத தொடக்கத்திலேயே பதிவாகியுள்ளது.
வழக்கமாக ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே காணப்படும் வெள்ள நிலைமை இந்த ஆண்டு வெப்பநிலை வழமையை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததன் காரணமாக முன்கூட்டியே ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில பகுதிகளில் மழைவீழ்ச்சி வரலாற்றுச் சராசரியை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீவிர வெள்ள அபாயம் காரணமாக தியான்ஷான் மற்றும் குன்லுன் மலைத்தொடர்களில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் வேகமாக உருகி டாரிம் ஆற்றில் அதிகளவு நீர் கலந்துள்ளது. இதனால் ஆறு கரைபுரண்டு பாலைவனத்தின் தாழ்வான பகுதிகளுக்குள் நீர் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளநீர் தற்காலிகமாக சில பகுதிகளில் பசுமை வளங்களை உருவாக்க உதவினாலும் சாலைகள், தொடருந்து பாதைகள் மற்றும் எண்ணெய், எரிவாயு உள்கட்டமைப்புகளுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே வெள்ள அபாயம் நிலவும் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பயணிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து பாதுகாப்பை முதன்மையாகக் கருதி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





Leave a Reply