குற்றவாளி வெளிநாட்டவர்களை நாடுகடத்த புதிய வழி- ஜெர்மனி நீதிமன்றம்
ஜெர்மனியில் சமீபத்தில் வெளியான ஒரு முக்கியமான நீதிமன்ற தீர்ப்பு, கடுமையான குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களை நாடுகடத்த அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான வலிமையை அதிகரித்துள்ளது. குறிப்பாக கர்ல்ஸ்ரூ (Karlsruhe) நிர்வாக நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு பாதுகாப்பு மற்றும் பொதுநலன் முன்னுரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இந்த வழக்கு சிறுவயதில் ஜெர்மனிக்கு வந்த ஒரு சிரிய அகதி மீது மையப்படுத்தப்பட்டது அவர் பின்னர் கடுமையான வன்முறை குற்றங்களில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார்.
ஜெர்மனி நீதிமன்றம் அந்த நபரை ஜெர்மனியில் தங்க விடுவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருக்கலாம் என்று கண்டறிந்து அவரை நாடுகடத்துவதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில் அகதி அந்தஸ்து பெற்றவர்களுக்குக் கூட அவர்கள் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டால் அந்த பாதுகாப்பு நிலை நிரந்தரமல்ல என்றும் அது ரத்து செய்யப்படலாம் என்றும் நீதிபதிகள் தெளிவாக தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பு இன்னும் இறுதி அல்ல மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளில் அரசாங்கத்துக்கு எளிதாக நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் இந்த தீர்ப்பு சிரியர்களுக்கு மட்டுமல்லாமல் ஜெர்மனியில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். வன்முறை குற்றங்களில் ஈடுபட்டால் அகதி அந்தஸ்து தற்காலிக அனுமதி அல்லது “Duldung” போன்ற நிலைகள் இருந்தாலும் கூட நாடுகடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
சமீப காலங்களில் ஜெர்மனி அரசியல் சூழல் கடுமையாக மாறி வருவதால் இந்த விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. இதனுடன் சிரியர்களை மீண்டும் நாடு திருப்புவது குறித்த அரசியல் விவாதமும் அதிகரித்து வருகிறது.
ஆயினும் ஜெர்மனியின் தொழிலாளர் சந்தையில் சிரியர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருப்பதால் பெரிய அளவில் நாடுகடத்தல் நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலையும் உள்ளது. 2012 முதல் நீண்ட காலம் சிரியாவுக்கு நாடுகடத்தல் நிறுத்தப்பட்டிருந்தாலும் 2025 இறுதியில் இருந்து சில குற்றவாளிகள் மீண்டும் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.





Leave a Reply