அரச துறையின் பல்வேறு தொழில்முறைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடமிருந்து ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக கிடைத்து வருவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மீரிகம வைத்தியசாலையில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இந்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக பரிசீலனை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறைப் பிரிவுகளிலிருந்தும் சுகாதார சேவையில் பணியாற்றும் பல்வேறு தொழில்முறை நிபுணர்களிடமிருந்தும் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளிடமிருந்தும் ஓய்வுபெறும் வயதை உயர்த்துமாறு வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தங்களால் இன்னும் சில ஆண்டுகள் திறம்பட சேவையாற்ற முடியும் என்பதால் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தியுள்ளதாகவும் இந்த விடயத்திற்கு சில தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் இருந்தாலும் அரசாங்கம் அனைத்து தரப்புகளின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு இறுதி முடிவை எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.











Leave a Reply