இங்கிலாந்தின் லீமிங்டன் ஸ்பாவில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தில் தஞ்சம் கோரி வந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இரண்டு டீனேஜர்களான 17 வயது ஜான் ஜஹான்சீப் மற்றும் இஸ்ரார் நியாசல் ஆகியோருக்கு வார்விக் கிரவுன் நீதிமன்றம் கடும் சிறைத்தண்டனையை விதித்தது.
மே 10 அன்று நடந்த தாக்குதலை இவர்கள் அக்டோபர் மாத விசாரணையில் ஒப்புக்கொண்டனர். ஊடக நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இவர்களின் பெயர்களுக்கு இருந்த அறிக்கையிடல் தடையை நீதிபதி சில்வியா டி பெர்டோடானோ நீக்கினார். ஜஹான்சீப்பிற்கு 10 ஆண்டுகள் 8 மாதங்கள் இளைஞர் தடுப்புக்காவல் தண்டனையும் நாடுகடத்தல் ஆவணங்களும் வழங்கப்பட்டன.
நியாசலுக்கு 9 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவரையும் நாடுகடத்த அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார். இருவரும் தண்டனையின் ஆரம்பத்தை இளம் குற்றவாளிகள் நிறுவனத்தில் அனுபவித்து பின்னர் சிறைக்குக் மாற்றப்படுவார்கள். மேலும், வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டதுடன் காலவரையற்ற தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
துணையில்லாத புகலிடம் கோருபவர்கள் ஆகிய இவர்கள் சிறுமியை லீமிங்டன் ஸ்பாவில் உள்ள பூங்காவின் “குகை போன்ற” பகுதியில் அழைத்துச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கறிஞர் தெரிவித்தார். காட்சிப்பதிவில் சிறுமி உதவிக்காக கத்துவதும் ஜஹான்சீப் அவளது வாயை மூடுவதும் தெளிவாக காணப்பட்டதாக கூறப்பட்டது.
தாக்குதலுக்குப் பிறகு ஒரு பொதுமகன் சிறுமிக்கு உதவி செய்து காவல்துறையை அழைக்குமாறு அறிவுறுத்தினார். தண்டனைக்கு முன் வாசிக்கப்பட்ட அறிக்கையில், “இந்த சம்பவம் என்னை வாழ்நாள் முழுவதும் மாற்றியது நான் இனி பாதுகாப்பாக உணரவில்லை” என்று சிறுமி தெரிவித்தார். அவரது தாயார், “எங்கள் தன்னம்பிக்கை கொண்ட மகள் பதட்டத்திலும் உடல் நலக்குறைவிலும் துயரப்படுவதைப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம் அன்று எங்களுள் ஏதோ ஒன்று உடைந்தது” என்று கூறினார்.
தண்டனைக்குப் பிறகு வார்விக்ஷயர் காவல்துறையின் அதிகாரி “குற்றவாளிகள் நோக்கத்தோடு நட்பு காட்டி இந்தக் கொடூரத்தைச் செய்தனர் தண்டனையின் கடுமை பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.





Leave a Reply