பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் நேற்று (12) நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் மலையக சமூகத்தினருக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி சுமார் 202 ஆண்டுகளாக பூமியுடன் போராடி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்திய மலையக மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்வது என் பொறுப்பாகும் என வலியுறுத்தினார். மேலும் தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான ரூ.1,750 நாளாந்த சம்பளத்தை இந்த ஆண்டிற்குள் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்திய லங்கா IV ஆம் கட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ள 10,000 வீடமைப்பு திட்டத்தில் 2,000 பயனாளிகளுக்கு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டிற்கும் இந்திய அரசாங்கம் ரூ.28 இலட்சமும் இலங்கை அரசாங்கம் ரூ.4 இலட்சமும் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதுகாப்பான வீடுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி மேலும் சுத்தமான குடிநீர் சுகாதார வசதிகள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய துறைகளில் அரசு விசேட கவனம் செலுத்தி வருவதாக கூறினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு அவர்களின் தொடர்ந்த ஆதரவிற்காக நன்றியையும் தெரிவித்தார்.
நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் மூலம் மலையக மக்களின் நீண்டநாள் கனவான நில உரிமையும் வீட்டு உரிமையும் யதார்த்தமாக மாறிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும்.





Leave a Reply