நடப்பு ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கும் நாட்டில் நீர் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு குறிப்பிடத்தக்க அளவில் கூடுதல் செலவுகள் ஏற்படாததால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக ஆண்டுக்கு இரு முறை நீர் கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டாலும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலும் கட்டண உயர்வு மேற்கொள்ளப்படவில்லை. இதேபோன்று ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை நீடிக்கும் அடுத்த ஆறு மாத காலப்பகுதியிலும் தற்போதைய கட்டணமே தொடரும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார். மேலும் மின் கட்டணம் 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருந்தாலும் நீர் வழங்கல் செலவில் மின்சாரத்தின் பங்கு 12 சதவீதம் மட்டுமே என்பதால் ஒரு நீர் அலகுக்கான செலவு சுமார் 2.50 ரூபாவால் மட்டுமே உயர்ந்துள்ளதாக அவர் விளக்கினார்.
அதேவேளை எரிபொருள் விலை உயர்வு நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், கடந்த ஆறு மாதங்களில் மொத்த செலவுகள் மிகக் குறைந்த அளவிலேயே உயர்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாமல் தற்போதைய நீர் கட்டணத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.









Leave a Reply