நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கும் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையின்படி மேல் மாகாணமே டெங்கு பாதிப்பில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுடன் பத்தரமுல்ல, மகரகம, பிலியந்தலை, ஹோமாகம, கடுவெலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொடஉயன மற்றும் கொத்தடுவ உள்ளிட்ட பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, சீதுவை, களனி, ராகம, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கட்டான மற்றும் மஹர பகுதிகளும், களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வாதுவை, களுத்துறை மற்றும் பாயாகல பகுதிகளும் அதிஅவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.







Leave a Reply