இலங்கையில் மின்சார பாவனை – புதிய வழிகாட்டல் வெளியீடு.
இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மின்சாரம் மற்றும் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்கள் (வழிகாட்டி இலக்கம் 02) அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகளின்படி, அரசு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களில் பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் அனைத்து குளிர்சாதன (Air Conditioner) இயந்திரங்களும் அணைக்கப்பட வேண்டும் என்றும், தனியார் துறையினரும் இதனை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படும் மின்சார ஒளிப்பலகைகள் மற்றும் திரைகள் இரவு 8.00 மணிக்குப் பிறகு அணைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீதி விளக்குகளை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கட்டுப்படுத்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு விசேட திட்டங்களை அமல்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், 100 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வதற்கான இசை நிகழ்ச்சிகள் அல்லது பெரிய அளவிலான விழாக்கள் நடத்தப்படும் போது தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து மின்சாரம் பெறாமல் மாற்று வழிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டல்கள் ஜனாதிபதி செயலாளர் நிதிச் சேவை ஆணைக்குழு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Leave a Reply