2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை முடிவுகள் அவர்கள் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோன்றியதாகக் கூறி இடைநிறுத்தப்பட்ட சம்பவத்தில் மாணவிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மாணவிகளின் மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றும் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டிய உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மாணவிகளின் இன மற்றும் மத அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அவர்களது கல்வி எதிர்காலத்தை மட்டுமல்லாது அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பரீட்சையின்போது மாணவிகள் தலையை சால்வை அல்லது ஹிஜாப் மூலம் மறைத்திருந்தது அவர்களின் மத நம்பிக்கையின் வெளிப்பாடாகும் என்றும் அரசியலமைப்பின் 14(1)(இ) உறுப்புரையின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மதச் சுதந்திரத்தின் வரம்பிற்குள் அது அடங்குவதாகவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
நீண்டகாலமாக இலங்கையில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில் அந்த உரிமையை வெளிப்படுத்திய காரணத்தால் அவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்திவைத்தது மதச் சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வெளியக மேற்பார்வையாளரின் முறைப்பாடு குறித்து நடுநிலையான விசாரணை நடத்துதல் பரீட்சை விதிகள் மத நம்பிக்கைக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படாத வகையில் தெளிவான சுற்றறிக்கை வெளியிடுதல் மற்றும் எதிர்காலத்தில் பரீட்சை நிலையங்களில் போதிய எண்ணிக்கையிலான தமிழ்பேசும் பெண் மேற்பார்வையாளர்களை நியமித்தல் உள்ளிட்ட பரிந்துரைகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ளது.








Leave a Reply