சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (18) கொழும்பில் இடம்பெற்ற இந்த விசாரணையில் எழுத்தாளர் தீபச்செல்வன் சார்பில் சட்டத்தரணி கலாநிதி விரஞ்சன ஹேரத் மற்றும் சட்டத்தரணி நடராஜா காண்டீபன் ஆகியோர் முன்னிலையாகினர். அதேவேளை எதிர்த்தரப்பினராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சு கலாசார அமைச்சு மற்றும் சுங்கத் திணைக்களத்தின் சார்பிலும் சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விசாரணையின் போது தமிழ் மக்களின் வரலாறு நினைவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்து எழுதுவதற்கான உரிமை தமக்குள்ளது என்பதை வலியுறுத்தியதாக தீபச்செல்வன் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விரைவில் நியாயமான தீர்வும் நீதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த வழக்கு எழுத்துச் சுதந்திரம் மற்றும் பண்பாட்டு வெளிப்பாட்டு உரிமைகள் தொடர்பான முக்கிய விவகாரமாக கவனம் பெற்றுள்ளது.







Leave a Reply