யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீது பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலரால் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் மாணவர் ஒன்றியம் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
சிங்கள மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் நிகழ்வு ஒன்றியத்தின் முழுமையான ஒப்புதல் மற்றும் ஆதரவுடன் நடைபெற்றதுடன் தமிழ் மாணவர்களும் அதன் வெற்றிக்காக ஒத்துழைப்பும் உதவியும் வழங்கியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நாசவேலைக்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய மாணவர் ஒன்றியம் ஒரு சில நபர்களின் செயலை அடிப்படையாகக் கொண்டு முழு தமிழ் மாணவர் சமூகத்தையும் குற்றம்சாட்டுவது நியாயமற்றதும் தவறாக வழிநடத்தக்கூடியதுமாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தனிப்பட்ட சம்பவத்தை இனவாத பிரச்சினையாக மாற்றும் எந்தவொரு முயற்சியையும் நிராகரிப்பதாகவும் மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நியாயமான மற்றும் விரிவான விசாரணை நடத்த அனுமதிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் சகவாழ்வு போன்ற மதிப்புகளை தொடர்ந்து பேண உறுதியுடன் இருப்பதாகவும் மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.





Leave a Reply