கிளிநொச்சி பச்சிளைப்பள்ளியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபருக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் இன்றைய தினம் (17)காலை 7:30 மணியளவில் அமைதி வழியில் ஓர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை அதிபரின் முறையற்ற செயற்பாடுகள், பாடசாலை சமூகத்தினை புறக்கணித்து தன்னிச்சையாக முடிவெடுத்தல், பாடசாலை கணக்கறிக்கைகளின் முறைகேடு, பாடசாலைக்கு மக்கள் அளிக்கும் நன்கொடைகளில் ஊழல், சொந்த பகைமையை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை புறக்கணித்தல் போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி குறித்த அமைதி வழி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

 அமைதி வழியாக ஆர்ப்பாட்டம் 

 பாடசாலை சமூகம் அதிபருக்கு எதிரான பதாதைகளை ஏந்தி மிகவும் அமைதி வழியாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதோடு இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இதற்கான முடிவு கிடைக்கவில்லை என்றால் பாடசாலையினை முடக்கி ஆர்ப்பாட்டத்தை நடாத்துவோம் என பாடசாலை சமூகத்தால் கூறப்பட்டது.

இவ் முறைகேடுகள் தொடர்பாக பளை கோட்டக்கல்வி பணிமனை மற்றும் வலயம், மாகாணகல்வித் திணைக்களம் போன்றவற்றிற்கு முறைப்பாட்டுக் கடிதங்களை அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இது சம்பந்தமாகவும் எந்த விதமான தீர்வும் கிடைக்கவில்லை எனவும் பாடசாலை சமூகத்தினர் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்

முறைகேடுகளில் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு

  இந்த முறைகேடு செயற்பாடுகளில் தற்போது ஆளும் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது எனவும் அதனை உடனடியாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு அதற்கான உடனடி தீர்வு எடுக்க வேண்டும் என பாடசாலை சமூகத்தால் கூறப்பட்டது.

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் என இளைஞர்கள்  பலரும் கலந்து கொண்டனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading