அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிறுவனங்களால் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பயிற்சிச் சான்றிதழ்களுடன் இயங்கி வரும் உடல் பிடிப்பு நிலையங்கள் (ஸ்பா) மீது பொலிஸார் சட்டவிரோதமான முறையில் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து வருவதாக இலங்கை உடல் பிடிப்பு நிலையங்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் சுற்றிவளைப்புகள் பெண் ஊழியர்கள் மீதான அத்துமீறல்கள் மற்றும் சங்கத் தலைவருக்குச் சொந்தமான நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சங்கத்தின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் எழுத்துமூல முறைப்பாடுகளை வெள்ளிக்கிழமை (03) கையளித்துள்ளனர்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் சுமேத பெரேரா சுற்றுலா அமைச்சின் உரிமங்களுடனும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிச் சான்றிதழ்களுடனும் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும் இந்த நிறுவனங்கள் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் வருபவை அல்ல என்றும் இத்தகைய சோதனைகள் சுற்றுலா சபை அதிகாரிகளுடன் இணைந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நலின் குமார அண்மையில் தலவத்துகொட சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வழியாக வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாகவும் அதன் பின்னர் வத்தளை பகுதியில் சங்கத் தலைவருக்குச் சொந்தமான நிறுவனம் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்தத் துறையை நம்பி சுமார் ஒரு இலட்சம் பேர் வாழ்வாதாரம் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விரிவான மற்றும் சுயாதீன விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.









Leave a Reply