கசகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் எதிர்காலத்தில் இலங்கை தூதரகத்தை நிறுவுவதற்கான எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அதன் மூலம் மத்திய ஆசிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்பு உருவாகும் என்றும் சிவில் விமான சேவை மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கை–கசகஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விமான சேவை சுற்றுலா மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (01) சிவில் விமான சேவை மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கான கசகஸ்தான் தூதுவர் செர்ஜி விக்டோரோவ் அமைச்சின் மேலதிக செயலாளர் வி. ஜெகதீசன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கடந்த 2025 ஜூலை மாதம் இலங்கையில் கசகஸ்தான் தூதரகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் கடந்த ஆண்டு கசகஸ்தானிலிருந்து சுமார் 11,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தற்போது டிசம்பர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே இயங்கும் எயர் அஸ்தானா விமான சேவையை ஆண்டு முழுவதும் இயக்குவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன் கசகஸ்தான் இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்தாலும் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் இன்னும் குறைந்த அளவிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் தனியார் துறையின் பங்களிப்புடன் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் கசகஸ்தானின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான எரிவாயு மற்றும் கனிம வளங்கள் தொடர்பிலும் இரு நாடுகளும் எதிர்காலத்தில் விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.









Leave a Reply