இலங்கை முன்னாள் இராணுவ தளபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2009 ஆம் ஆண்டு எல்.டி.டி.ஈ.க்கு எதிரான இறுதி போருக்குறித்து அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இராணுவத்தின் வெற்றியை திட்டமிட்டு தாமதப்படுத்த முயன்றதாக அவர் குற்றம்சாட்டினார். 2009 ஜனவரி 26 அன்று இராணுவம் முல்லைத்தீவை கைப்பற்றியதை அடுத்து 12 மணி நேரத்திலேயே புதுக்குடியிருப்பு நோக்கி முன்னேறிய நிலையில் மறுநாள் கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு சோர்வு ஏற்பட்டதா என்று கேட்டு கட்டளை அதிகாரத்தை மாற்ற முன்வந்ததாகவும் பொன்சேகா கூறினார்.
அவரது கூற்றுப்படி, அப்போது பிரபாகரன் மற்றும் அவரது குழுவினர் அழிவின் விளிம்பில் இருந்தபோதும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக 2009 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை 48 மணி நேர போர்நிறுத்தம் அறிவித்தார். பாதுகாப்பு கவுன்சில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் இராணுவத்துக்கு கட்டாயமாக அதனை மதிக்கச் சொல்லப்பட்டதாகவும் இதன் விளைவாக இராணுவம் 5 கிலோமீட்டர் பின்வாங்கியதுடன் சுமார் 500 வீரர்களை இழந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த போர்நிறுத்தம் பிரபாகரன் மற்றும் சிலர் தப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2005 ஜனாதிபதி தேர்தலின்போது எல்.டி.டி.ஈ. யினருக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் மஹிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்டது என்றும் அதனால் பிரபாகரன் வாக்களிப்பைத் தடுத்ததால் மகிந்த 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்றும் பொன்சேகா அதிர்ச்சிகரமாக வெளிப்படுத்தினார். இந்த பரிமாற்றத்தில் பசில் ராஜபக்ஷவும், சில அரசியல்வாதிகளும் ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், பிரபாகரன் 2010 தேர்தலுக்கு முன் கொல்லப்பட்டால் தமிழ் மக்கள் மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற அச்சம் மகிந்த ராஜபக்ஷவுக்கு இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு வெற்றியை கொண்டாட காத்திருந்த போது மகிந்த ராஜபக்ஷ தேர்தலை மட்டும் நினைத்தார். ஆனால் இப்போது அவர் என்னை நாட்டை நேசிக்காதவன் என்று கூறுகிறார் என சரத் பொன்சேகா மஹிந்த ராஜபக்சாவை சாடினார்.





Leave a Reply