கனடா அரசு – புதிய சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
கனடா அரசு நாட்டிற்குள் ஏற்படும் காட்டுத்தீ, வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக புதிய சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் கடுமையான வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதால் இந்த புதிய திட்டம் மூலம் தற்காலிகமாக கனடாவில் வாழும் வெளிநாட்டு மாணவர்கள் தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் போன்றவர்களுக்கு குடிவரவு தொடர்பான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த புதிய நடவடிக்கைகளின் கீழ் இயற்கை பேரழிவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் குடிவரவு ஆவணங்களை (work permit, study permit போன்றவை) மாற்றிக்கொள்ளவும் காலாவதியான தற்காலிக குடியிருப்பு நிலையை மீண்டும் புதுப்பிக்கவும் அல்லது நீட்டிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டிய நிலையில் இந்த திட்டத்தின் கீழ் 6 மாதங்கள் வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் பேரழிவு நேரங்களில் உதவ வருகிற வெளிநாட்டு அவசர சேவை பணியாளர்களுக்கு (emergency workers) விசா விண்ணப்ப மற்றும் பயோமெட்ரிக் கட்டணங்களில் விலக்கு வழங்கப்படுகின்றது. இதனால் அவர்கள் விரைவாக கனடாவிற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட முடியும்.
இந்த சிறப்பு நடவடிக்கைகள் 2026 ஏப்ரல் 1 முதல் 2028 நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும் என்று கனடா அரசு அறிவித்துள்ளது. பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் நிலையை விளக்கும் கடிதம் மற்றும் பாதிப்பு ஏற்பட்ட பகுதியை நிரூபிக்கும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முயற்சி இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சிரமங்களை குறைத்து மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வு தொடர உதவும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.





Leave a Reply