நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதுடன் தனியார் ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணத்தையும் உடனடியாகக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தற்போது தனியார் ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைக்காக சுமார் 1,200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பெரும் சுமையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஊழல்வாதிகளிடமிருந்தோ அல்லது பாதாள உலகக் குழுக்களிடமிருந்து அரசாங்கம் கைப்பற்றிய பணத்தையோ பயன்படுத்தி டெங்கு பரிசோதனை செலவுகளை ஈடுசெய்யலாம் என்றும், மனிதாபிமான அடிப்படையில் இந்த கட்டணத்தை 600 அல்லது 700 ரூபாயாகக் குறைக்க தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் அரசாங்க மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனை முடிவுகளைப் பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி இணைந்து அரச மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ளும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.









Leave a Reply