ஆசிரியர்கள் மற்றும் அரச அதிகாரிகளை நியமிக்கும் போதும், இடமாற்றம் செய்யும் போதும் யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், அனைத்து மாவட்டங்களையும் சமமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – இரணைமடு இராணுவ முகாமின் ‘நெலும் பியஸ’ மண்டபத்தில் நடைபெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்குப் பயனுள்ள வகையில் அரச வளங்களை பயன்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பொருளாதார முகாமைத்துவத்தை முன்னெடுத்து வருவதாக கூறினார்.
2026 ஆம் ஆண்டில் நாட்டளாவிய ரீதியில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஏனைய அரச உத்தியோகத்தர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க அமைச்சுகள் மற்றும் மாகாண மட்டத்தில் உள்ள அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
“தேசிய – மாகாண வேறுபாடுகளை மறந்து விட வேண்டும். ஒவ்வொரு பாடசாலையிலும் இருப்பவர்கள் எமது பிள்ளைகளே. அந்த அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியைப் பெறும் உரிமை உள்ளது,” என பிரதமர் வலியுறுத்தினார்.
எனவே ஆசிரியர்களை நியமிக்கும் போதும், இடமாற்றம் செய்யும் போதும், அதிகாரிகளை நியமிக்கும் போதும் யாழ்ப்பாணத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளையும் சமமாகப் பார்க்க வேண்டும் என அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
“இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் வடக்கு மாகாணம் தொடர்பான முக்கிய தீர்மானங்களை எடுப்பவர்கள் நீங்களாக இருப்பீர்கள். அப்போது வடக்கின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு செயல்படுவீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.





Leave a Reply