இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (Indian Peace Keeping Force) நிலைகொண்டிருந்த 1980களின் இறுதிப்பகுதியில் கொல்லப்பட்ட அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய புதிய டிஜிட்டல் தரவுத்தளமொன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணக்காப்பகத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (International Truth and Justice Project) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெளியிட்டுள்ளது.
1987 ஒக்டோபர் முதல் 1990 மார்ச் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களே இதில் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழ் ஆண்கள் என குறிப்பிடப்படும் நிலையில் இது வெறும் புள்ளிவிவரமல்லாது திட்டமிட்டு மறைக்கப்பட்ட மனித உயிர்களின் வரலாற்று பதிவாகும் என ITJP அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தரவுத்தளம் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (Human Rights Data Analysis Group) ஆலோசனையின் கீழ் உருவாக்கப்பட்டதாகவும் சாட்சிகள், உறுதிமொழிகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட ஊடக அறிக்கைகள் அடிப்படையாகக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ITJP நிறைவேற்றுப் பணிப்பாளர் Yasmin Sooka, பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை கண்ணியத்துடன் மீட்டெடுப்பதே தங்களது நோக்கம் என தெரிவித்ததுடன் இதுவரை எந்தவொரு தரப்பும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படாதது குறித்து கவலை வெளியிட்டுள்ளார். அதேவேளை ஆலோசகர் Michele Duicich தலைமையில் இந்த தரவுகள் முறையாக தொகுக்கப்பட்டு பிரதேசம், பாலினம், காலகட்டம் மற்றும் இனம் அடிப்படையில் தேடக்கூடிய வகையில் இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Leave a Reply