வனவாசல உப தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற தொடருந்து விபத்துக்கு தடம் மாற்றும் அமைப்பின் இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டிருந்தமையே காரணம் என தொடருந்து திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு திண்மக் கழிவு பதப்படுத்தும் வளாகத்துக்கும் பிரதான தொடருந்து பாதைக்கும் இடையில் தொடருந்துகளை தடம் மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் இணைப்பு கம்பிகள் யாரோ ஒருவர் அல்லது ஒரு குழுவினரால் திட்டமிட்டோ அல்லது திருடும் நோக்கிலோ கழற்றப்பட்டிருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வனவாசல் தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள திண்மக் கழிவு பதப்படுத்தும் வளாகத்துக்கான பழைய தொடருந்து பாதை தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலையில் அந்தப் பகுதியிலேயே இலக்கம் 507 உடைய தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்தார். இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டதால் தடம் மாற்றும் அமைப்பு தளர்வடைந்ததுடன் தொடருந்தின் முன் பெட்டி பிரதான பாதையில் சென்றும் பின் பெட்டிகள் திண்மக் கழிவு வளாகத்திற்கான பாதையில் சென்றும் பயணித்ததால் இரண்டாவது பெட்டி தடம் புரண்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தொடருந்து போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.





Leave a Reply