முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்புக்கு குடிபெயர்ந்திருந்தாலும், தங்காலை கார்ல்டன் இல்லத்திலும் கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள இல்லத்திலும் மாறி மாறி தங்கிவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச நுகேகொடை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ச குடும்பம் யார் என்பதை நன்கு அறிந்த நண்பர் ஒருவர் எந்தவித அச்சமும் இன்றி மகிழ்ச்சியுடன் அந்த வீட்டை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் மகிந்த ராஜபக்ச அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் கவனித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபாடு
மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்காலத்திலும் கட்சி கூட்டங்களில் கலந்துகொள்வதுடன், கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவார் என கூறினார்.
“எங்கள் நண்பர்கள் எங்களை யார் என்பதை அறிந்தவர்கள். அவர்கள் இந்த அரசாங்கத்திற்கு பயப்படவில்லை. அதனால் எங்களுக்கு வீடுகளை வழங்குவதிலும் தயங்கவில்லை” என அவர் தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சுதந்திரம் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும், அவர் தற்போதைய அரசியல் நிலவரங்களை நிதானமாகக் கவனித்து வருவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.





Leave a Reply