இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நோயாளர்களின் சிகிச்சை உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் நோய் தடுப்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என தேசிய புற்றுநோயியல் நிறுவனத்தின் ஆலோசகரும் புற்றுநோய் வைத்திய நிபுணருமான கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மறைந்த பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவு நிகழ்வில் உரையாற்றிய அவர் புற்றுநோய் என்பது இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய அளவிலும் அதிகரித்து வரும் சுகாதார சவாலாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார். உணவுப் பழக்கவழக்கங்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகள் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் போன்றவை நோய் பரவலுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை சீரான உடற்பயிற்சி பாதுகாப்பான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் புற்றுநோயைத் தடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சுகாதார அமைச்சு பல ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் நோயாளர்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி வாழ்க்கைமுறையில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தினால் புற்றுநோயின் தாக்கத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





Leave a Reply