கல்வித் துறையில் யாழ்ப்பாணத்திற்கு தனி இடமும் தனித்துவமும் காணப்படுவதாகவும், இப்பிரதேசத்தில் இருந்து பல சிறந்த கல்விமான்கள் உருவாகியுள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கல்வியில் நாம் எக்காரணம் கொண்டும் பின்னடைந்து விடக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தில் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் முக்கிய பொறுப்பு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலைமன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (27) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி – விளையாட்டு – போதைப்பொருள் ஒழிப்பு
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“கல்வியும் விளையாட்டும் சிறந்து விளங்கும் சமூகத்தில் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு இடமில்லை. கல்வி மற்றும் விளையாட்டு மூலமே போதைப்பொருள் ஒழிப்பை நடைமுறைப்படுத்த முடியும்” என கூறினார்.
இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 14 கலைமன்றங்களுக்கு ஆற்றுகைப் பொருட்களும், 100 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
கல்விக்காக யாழ்ப்பாண சமூகத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தாய்மார்கள் கூட தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மீண்டும் கல்வி கற்கும் நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் விளையாட்டு முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், கல்வி மற்றும் விளையாட்டு மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்; அதன்மூலம் போதைப்பொருள் போன்ற தீய பழக்கங்கள் தானாகவே அழிந்துவிடும் என்றும் கூறினார்.
கல்வியில் பின்தங்கிய சமூகங்கள் கலாசார ரீதியிலும் தவறான பாதைகளுக்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.





Leave a Reply